26 September 2010

புதிய வைரஸ் எச்சரிக்கை

நாசா,டிஸ்னி, கோகா கோலா போன்ற மிகப் பெரிய பாதுகாப்பான நிறுவனங்களை எல்லாம் பாதித்த வைரஸ் ஒன்று இப்போது உலகெங்கும் பரவி வருகிறது.

“Here You Have” என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த வைரஸ், இந்த சொற்களை சப்ஜெக்ட் பெட்டியில் கொண்டு வரும் இமெயில்கள் மூலம் பரவுகிறது. உங்கள் நண்பரின் மின்னஞ்சல் முகவரியிலிருந்து வரும், மின்னஞ்சல் கடிதமாக இது இன் பாக்ஸை வந்தடைகிறது. அதில் “நீங்கள் கேட்ட பாலியல் பட பைல் இதோ இங்குள்ளது’ என்று ஒரு பிடிஎப் பைலுக்கு லிங்க் தருகிறது. இது பிடிஎப் பைலே அல்ல. .scr. என்ற துணைப்பெயருடன் உள்ள ஒரு கோப்பு. விண்டோஸ் ஸ்கிரிப்ட் அடங்கிய வைரஸ் கோப்பு.

இது CSRSS.EXE என்னும் கோப்பினை உங்கள் விண்டோஸ் டைரக்டரியில் பதிக்கிறது. இயங்கத் தொடங்கியவுடன் உங்கள் ஆண்ட்டி வைரஸ் கோப்பின் இயக்கத்தை நிறுத்துகிறது. இது ஒரு பாட்நெட் வகை வைரஸ். ஆனால் பழைய நிம்டா, அன்னா கோர்னிகோவா (2001 ஆம் ஆண்டு) மற்றும் மெலிஸ்ஸா வைரஸ் போல பரவுகிறது. ஆர்வத்தில் அல்லது ஆசையில் இதில் உள்ள லிங்க்கில் கிளிக் செய்தவுடன் இந்த வைரஸ் உங்கள் கம்ப்யூட்டரில் வந்து இறங்குகிறது. அடுத்து உங்கள் இமெயில் முகவரி ஏட்டில் உள்ள அனைத்து முகவரிக்கும் இதே போல ஒரு செய்தியை அனுப்புகிறது. இது கடந்த செப்டம்பர் 10 முதல் உலகெங்கும் பரவி வருகிறது. தேடுதல் தளங்களில் தேடப்பட்ட தகவல்களில் இந்த தகவல் தான் இரண்டாம் இடம் கொண்டிருந்தது. SANS Technology Institute என்ற நிறுவனத்தின் இன்டர்நெட் கண்காணிப்பு பிரிவு, இந்த இமெயில் டன் கணக்கில் பரவுவதாக அறிவித்துள்ளது. மெக் அபி நிறுவனம் இந்த வைரஸ் குறித்து முழுமையாக அறிய சில நாட்கள் ஆகும் என்று தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்பால் Comcast என்ற கம்ப்யூட்டர் நிறுவனம் தன் இமெயில் சர்வர்களை எல்லாம் மூடிவிட்டது.
இந்த வைரஸை அனுப்பிய சர்வர் மூடப்பட்டுவிட்டது. அதிலிருந்து இந்த வைரஸ் கோப்பு எடுக்கப் பட்டிருக்கலாம். ஆனாலும், ஏற்கனவே பரவிய கம்ப்யூட்டர்களிலிருந்து இந்த வைரஸ் இன்னும் உலகம் முழுவதும் பரவி வருகிறது.

இதிலிருந்து எப்படி தப்பிப்பது?

நல்ல ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை பதிந்து இயக்குங்கள். ஏற்கனவே பதிந்திருந்தால், உடனே அப்டேட் செய்திடவும். இமெயில் இணைப்புகள் எது வந்தாலும் திறப்பதற்காக முயற்சி எடுக்க வேண்டாம். அனுப்பியவருக்கு தனி இமெயில் அனுப்பி, அனுப்பியதை உறுதி செய்து கொண்டு பின் திறக்கவும். “Here you Have” அல்லது “Just For You” என்று இருந்தால் எந்த சலனமும் இல்லாமல், முற்றிலுமாக அழித்துவிடவும். இந்த வைரஸ், நார்டன்/சைமாண்டெக் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளால் பாதுகாக்கப்பட்ட கம்ப்யூட்டர்களில் பரவ முடியவில்லை என்று ஒரு செய்தியும் வந்துள்ளது.

இருப்பினும் இமெயில்களைக் கவனமாகக் கையாளுங்கள்

12 September 2010

பொது கம்ப்யூட்டரை பயன்படுத்துகிறீர்களா?

கம்ப்யூட்டர் மையங்கள், பொதுவான அலுவலகங்கள், வாடகைக்கு கம்ப்யூட்டரைத் தரும் இடங்கள் ஆகியவற்றில் உங்கள் கம்ப்யூட்டர் பணிகளை மேற் கொள்கிறீர்களா?

அவை எல்லாம் உங்கள் வீட்டில் உள்ள கம்ப்யூட்டரைப் போல் பாதுகாப்பானவையாக இருக்காது. எனவே கவனமாகத்தான் இவற்றைப் பயன்படுத்த வேண்டும். குறிப்பான ஐந்து எச்சரிக்கைகளை இங்கு காண்போம்.

1. என்றைக்கும் பொதுக் கம்ப்யூட்டர்களில் உங்கள் பேங்க் அக்கவுண்ட்டைக் கையாளும் வேலையை வைத்துக் கொள்ள வேண்டாம். அந்தக் கம்ப்யூட்டரில் ஸ்பைவேர் அல்லது அட்வேர் என்ற வகையிலான புரோகிராம்கள் இருக்கலாம். இவை திருட்டுத்தனமாக உங்கள் அக்கவுண்ட் அதற்கான பாஸ்வேர்ட்களைப் பதிவு செய்து யாருக்கேனும் அனுப்பலாம். இதனால் உங்கள் அக்கவுண்ட்டில் இருந்து பணம் பறிபோகும் வாய்ப்புண்டு.

2. உங்கள் நிதி சார்ந்த கணக்கு வழக்குகள் அல்லது வருமான வரி சம்பந்தமான பைல்களை ஹோட்டல் ரிசப்ஷனில் விட்டுவிட்டு வருவீர்களா? வரமாட்டீர்கள் அல்லவா? அதுபோல பொதுக் கம்ப்யூட்டர்களில் உங்கள் வருமானம் அல்லது நிதி சார்ந்த பைல்களைத் தயார் செய்தால் உங்களுடைய பிளாப்பி அல்லது சிடியில் காப்பி செய்து பின் கம்ப்யூட்டரில் இருந்து அழித்துவிடவும். ரீசைக்கிள் பின்னில் கூட இருக்கக் கூடாது.

3. பொதுக் கம்ப்யூட்டர்கள் மூலம் எந்தப் பொருளையும் வாங்கக் கூடாது. இதனாலும் உங்கள் பெர்சனல் தகவல்கள் போக வாய்ப்புண்டு.

4. பொதுக் கம்ப்யூட்டர்களில் இன்டர்நெட் பிரவுசிங் செய்து முடித்தவுடன் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் உள்ள டெம்பரரி போல்டரில் உள்ள பைல்களை அழித்துவிடுங்கள். இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் Tools, Internet Options சென்று Delete பட்டனைத் தட்டி அழித்துவிடுங்கள். அல்லது
Delete All பட்டனைத் தட்டுங்கள்.

5. இன்னொரு சின்ன வேலையும் பாதுகாப்பானதே. கம்ப்யூட்டரை ரீ பூட் செய்திடுங்கள். இது மிச்சம் சொச்சம் மெமரியில் இருக்கும்
பைல்களை அழித்துவிடும்.

06 September 2010

இணைய செய்தி 15வது ஆண்டில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்



சென்ற ஆகஸ்ட் 16ல் தன் பதினைந்தாவது பிறந்த நாளை இன்டர்நெட் எக்ஸ்புளோரர் கொண்டா டியுள்ளது. நிறுவனங்கள் பயன்பாடு, விண்டோஸ் சிஸ்டத்துடன் இணைந்து தரப்படுவது போன்ற பல கூறுகளால், இன்னும் தன் முதல் இடத்தைப் பிரவுசர் சந்தையில் தக்கவைத்துள்ள இந்த பிரவுசர், இதற்கென தொடர்ந்து மேற்கொண்டு வரும் போராட்டம் கவனிக்கத்தக்கதாகும்.

2001 ஆம் ஆண்டில் விண்டோஸ் எக்ஸ்பி அறிமுகப்படுத்தப்பட்ட போது, மைக்ரோசாப்ட் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் குறித்த தன் நடவடிக்கை களில் சிறிது மந்த நிலையை மேற்கொண்டது. அந்த இடைப்பட்ட காலத்தில் பயர்பாக்ஸ் பிரவுசர் வெளியாகி, நல்லதொரு இடத்தைப் பிடித்துக் கொண்டது.

தொடர்ந்து கூகுளின் குரோம் பிரவுசரும் வெளியாக, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தன் இடத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மற்றவர்களுக்குத் தரத் தொடங்கியது. இதனால் தன் 15 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் இந்த மாதத்தில், பிரவுசர் சந்தையின் முதல் ஹீரோவாக இருந்தாலும், சுற்றிலும் பல போட்டியாளர்களைச் சந்திக்கும் நிலையிலேயே இ.எ. பிரவுசர் உள்ளது. ஜூலை இறுதியில் இ.எ. பிடித்துள்ள இடம் 60%; பயர்பாக்ஸ் 23%, குரோம் 7% மற்றும் சபாரி 5%.

கூகுள் தன் பிரவுசரான குரோம் தொகுப்பின் தன்மையை வேறு எந்த பிரவுசரும் கொண்டிருக்கவில்லை என்று பெருமைப்படுகிறது. இணைய வழி சேவைகள் என்று பார்க்கையில் கூகுள் தான் மிக அதிகமாக சேவைகள் தருவதாகவும், அதனாலேயே இதன் பிரவுசர் தனித்தன்மை கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளது.

குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அடிப்படையில் நெட்புக் கம்ப்யூட்டர்கள் வெளியாகும்போது, இந்த உண்மை தெரியவரும் என்றும் தெரிவித்துள்ளது.

இதனைச் சமாளிக்கும் வகையில் இ.எ. பிரவுசர் பதிப்பு 9 வெளியாக உள்ளது. தற்போதைய கம்ப்யூட்டர்களில் முக்கிய இடத்தைக் கொண்டிருக்கும் கிராபிக்ஸ் பயன்பாட்டினை இன்டர்நெட் எக்ஸ்புளோரருடன் இணைத்து, இதன் வலிமையை நிரூபிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் சில சோதனைப் பதிப்புகளையும் காட்டியுள்ளது.

இந்நிலையில் ஒரு கேள்வி நம் மனதில் எழுகிறது. எது முக்கியம்? ஆப்பரேட்டிங் சிஸ்டமா? பிரவுசரா? மைக்ரோசாப்ட் எப்போதும் ஒரு பிரவுசர், ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் ஒரு பகுதியாகவே இருக்க வேண்டும் என்ற கருத்தினை வெளியிட்டு வருகிறது. இங்கு தான் பிரச்னையே எழுகிறது. ஏன் மைக்ரோசாப்ட் இந்த நிலையை எடுக்கிறது என்று பார்க்கலாம்.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ல் வெளியானது. தன் விண்டோஸ் 95 தொகுப்பினை வெளியிட்டு ஒரு மாதம் கழித்து இந்த பிரவுசரை வெளியிட்டது. விண்டோஸ் 95 சிஸ்டத்தின் ஆட் ஆன் தொகுப்பாகத் தந்தது.

இணையத்தின் வலிமையை, திறனைத் தான் தெரிந்து கொண்ட தாகவும், அதனால் தன் அனைத்து சாதனங்களிலும், இணையப் பயன்பாட்டினை இணைக்க இருப்ப தாகவும் அறிவித்தது. அப்போது பிரவுசர் உலகில் கொடி கட்டிப் பறந்த நெட்ஸ்கேப் பிரவுசரை, இன்டர்நெட் எக்ஸ்புளோரரால் உடனே வெளியே தள்ள முடியவில்லை. 1997 ஆண்டு, முதல் ஆறு மாதம் வரை இ.எ. பிரவுசர் 50% இடத்தை மட்டுமே கொண்டிருந்தது.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 3, விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டு வெளியானபோதுதான், இ.எ. பிரவுசருக்கு நல்ல காலம் ஏற்பட்டது. உடனே இது போல இணைத்துத் தருவது, நிறுவனக் கொள்கைகளைக் காற்றில் பறக்க விடுவதாகும், எல்லை மீறிய செயல் என்று அப்போது ஐரோப்பிய கூட்டமைப்பு வழக்கு தொடுத்தது. சென்ற ஆண்டு தான் இந்த வழக்கு முடிவு மைக்ரோசாப்ட் நிறுவனத்தைத் தண்டிக்கும் வகையில் வெளியானது.

ஐரோப்பிய நாடுகளில் மட்டும் தன் பிரவுசரைக் காட்டாமல் இருக்கப்போவதாக, மைக்ரோசாப்ட் அச்சுறுத்திப் பார்த்தது. இறுதியில் மற்ற பிரவுசர்களையும் வாடிக்கையாளர்கள் விரும்பினால், டவுண்லோட் செய்து பயன்படுத்த வழிகளைத் தருவதாக அறிவித்தது.

நெட்ஸ்கேப் பிரவுசரைப் பின்னுக்குத் தள்ளி, இருக்கும் இடம் காணாமல் ஆக்கியபின், மைக்ரோசாப்ட் சற்று நிதான போக்கினைக் கடைப்பிடித்தது. அடுத்த புதிய வசதிகள், இ.எ. பதிப்பு 6ல் தான் தரப்பட்டது.

இந்த வேளையில் பயர்பாக்ஸ் டேப் பிரவுசிங் உட்பட பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியது. இது போன்ற சில புதுமைகள் எதனையும் தராததால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் சற்றுத் தள்ளாடியது.

இதனால், தன் இ.எ. பிரவுசர் பதிப்பு 8 மற்றும் பதிப்பு 9ல், இன்டர்நெட் உலகம் எதிர்பார்க்கும் நவீன வசதிகளைத் தர முனைந்து செயல்பட்டது. தொடர்ந்து இந்த முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளது.

1995: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 1.0

விண்டோஸ் 95 வந்த பின் ஒரு மாதம் கழித்து “Internet Jumpstart Kit” என அறிமுகப்படுத்தப்பட்டது. ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் ஒரு பகுதியாக வெளியாகவில்லை.

1995: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 2.0.

அந்த ஆண்டு நவம்பரில் வெளியானது. மேக் மற்றும் விண்டோஸ் ஆகிய இரு சிஸ்டங்களையும் இது சப்போர்ட் செய்தது.

1996: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 3.0.

1996 ஆகஸ்ட்டில் வெளியானது. இமெயில் சப்போர்ட் தரப்பட்டது. இமேஜ் பைல்கள் காட்டப்பட்டன. ஆடியோவும் இதிலேயே இயக்கப்பட்டது.

1997: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 4.0.

வாடிக்கையாளர்களுடன் தகவல் சேர்க்கும் வகையில், இன்ட்ராக்டிவ் இணைய தளங்கள் சப்போர்ட் செய்யப்பட்டன. மைக்ரோசாப்ட் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் 4.0. இமெயில் சேவையை வழங்கும் வகையில் வெளியானது.

1998: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 5.0.

தொழில் நுட்ப ரீதியாகச் சில திறன்கள் மேம்பாடடைந்தன.

2001: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 6.0.

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் ஒரு பகுதியாக வெளியானது. பல ஆண்டுகள் இதன் கூறுகளே, பிரவுசர் ஒன்றின் வரையறைக்கப்பட்ட கூறுகளாக இருந்து வந்தன.

2006: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 7.0.

2006 அக்டோபர் மாதம் வெளியானது. விண்டோஸ் சர்வீஸ் பேக் 2 பயன்படுத்துபவர்களுக்கென உருவாக்கப்பட்டு கிடைத்தது. பின்னர் விஸ்டாவின் ஒரு பகுதியானது. டேப் பிரவுசிங் வசதி தரப்பட்டது.

2009: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8.0.

மார்ச், 2009ல் வெளியானது. தன் பிரவுசிங் இன் ஜினை, நவீன தொழில் நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கியது மைக்ரோசாப்ட். இந்த பிரவுசரின் ஒரு பகுதி விண்டோஸ் 7 சிஸ்டத்தின் ஒரு பகுதியானது.

2011? இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9.0.

பெரிய அளவிலான அடுத்த அப்டேட் இதுவாகத்தான் இருக்கும். எச்.டி.எம்.எல்.5 தொழில் நுட்பத்திற்கான மேம்படுத்தப்பட்ட சப்போர்ட் தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேகமாக இயங்கும் ஜாவா ஸ்கிரிப்ட் இன் ஜின் கிடைக்கும். கம்ப்யூட்டரின் கிராபிக்ஸ் சிப்பின் திறனைப் பெற்று, டெக்ஸ்ட் மற்றும் கிராபிக்ஸ் திறனை மேம்படுத்திக் காட்டப்படும் வசதிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

03 September 2010

இன்டெல் நிறுவனத்தின் ஆபாரமான கண்டுபிடிப்பு

கணினி தொழில்நுட்பத்தின் அதிமேதாவியான இன்டெல் நிருவனத்தினர் ஆராய்ச்சி ஒன்றில் ஈடுபட்டனர்.அதில் ஈடுபட்ட பணியாளர்கள் கூறும் தகவல்கள் கணனி உலகத்தையே வியப்புக்குள்ளாக்கியுள்ளது.

கற்பனை மட்டும் செய்யுங்கள் போதும் எங்கள் கணினி அனைத்தையும் செய்து கொடுக்கும் என்கின்றனர் இந்த பணித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளோர்.இனிமேல் மௌஸ், கீபோர்ட் வைத்து நீங்கள் வேலை செய்ய தேவையில்லை. இணையத்தில் தேட வேண்டுமா?உதவியாளருக்கு கடிதம் எழுதுவதற்கான வாக்கியங்கள் கூற வேண்டுமா மனதில் நினைத்தால் மட்டும் போதும். என்ன நினைக்கின்றீர்கள் என்பதை மூளையை படிப்பதன் மூலம் கண்டுபிடித்து செய்து கொடுத்து விடுமாம் கணினிகள்.

இதற்காக கணினியை பயன்படுத்துவோரின் மூளையைப் பற்றிய விபரமான வரைபடக் குறிப்பு ஒன்றை உருவாக்கி மனிதன் என்ன நினைக்கும் போது எந்த வகையான மாற்றம் மூளையில் உருவாகும் என்பதையும் ஆராய்ச்சி செய்துள்ளனர் இந்த பொறியாளர்கள்.

ஆரம்ப கட்ட சோதனை முடிவுகளின் படி நினைப்பதை கண்டறிந்து அதை வார்த்தைகளாக மாற்ற முடியும் என்பது தெரிய வந்துள்ளதாகவும் இன்டெல் கூறுகிறது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More